இறுதிச் சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல்லில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இறுதி மரியாதை செலுத்தினார். பிறகு பிரதமர் நரேந்திர மோடி தங்கள் கட்சியின் மூத்தத் தலைவருக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
வாஜ்பாயியின் நெருங்கிய நண்பர் அத்வானி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பூடான் மன்னர், நேபாள, வங்கதேச, இலங்கை அமைச்சர்கள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக புது தில்லியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தல் வந்தடைந்தது.
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம் பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முற்பகல் 2 மணியளவில் புறப்பட்டது. பாஜக கட்சி அலுவலகத்தில் தொடங்கிய அவரது இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தது.
ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்ட வாஜ்பாயியின் உடலுக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலை முழுவதும் மக்கள் வெள்ளம் போல காட்சியளித்தது.
பாஜக தலைமையகத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்துக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாயியின் உடல் இறுதிச் சடங்கு நடைபெறும் மேடையில் வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.
இறுதி ஊர்வலத்தின் போது வாஜ்பாயியின் உடலுடன் நடந்தே வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வாகனத்தில் இருந்து வாஜ்பாயியின் உடல் இறக்கப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுதார்.
பூடான் மன்னர் மற்றும் நேபாளம், வங்கதேசம், இலங்கை அமைச்சர்களும், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபரும் வாஜ்பாயியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
10 முறை மக்களவைக்குத் தேர்வான மக்களின் தலைவராக விளங்கிய வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய், சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிவித்தது.
வாஜ்பாயியின் மறைவைக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் இன்று பொது விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம், விடியோ உதவி: ஏஎன்ஐ