மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் இறுதி நிலவரம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, மொத்தம் உள்ள 230 இடங்களில் 114 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. பாஜகவுக்கு 109 இடங்களும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் ஒரு இடத்தில் சமாஜவாதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பிற கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சமாஜவாதி, 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பாஜக ஆட்சியை இழக்கிறது.
இதுகுறித்து மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறுகையில்,
மத்திய பிரதேசத்தில் நாங்கள் பெரும்பான்மை பெறவில்லை. எனவே அங்கு ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது. ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.