மும்பை-லக்னௌ இடையிலான இண்டிகோ விமானத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து இண்டிகோ விமான செய்தித்தொடர்பாளர் கூறியதாவது,
169 பயணிகளுடன் காலை 6.05 மணிக்கு இயக்கப்படவிருந்த அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை-தில்லி இடையிலான விமானப் பயணி ஒருவர் மும்பை விமான நிலையத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனை செய்தனர்.
அந்த பெண் பயணி மும்பை விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ அலுவலகத்தில் இந்த தகவலை தெரிவித்தது மட்டுமல்லாமல் சில நபர்களின் புகைப்படங்களைக் காட்டி அவர்கள் தான் இதற்கு காரணம், அவர்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. பாதுகாப்புப் படையினர் இதுகுறித்து அந்த பெண்ணிடம் விமான நிலையத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால் 1 மணி நேரத்துக்குப் பின்னர் மும்பை-லக்னௌ இடையிலான அந்த விமானம் மீண்டும் இயக்கப்பட்டது என்றார்.