மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட மத்திய அரசு எந்தவித அனுமதியையும் தரக் கூடாது என அதிமுக மூத்த தலைவரும், மக்களவைத் துணைத் தலைவருமான மு.தம்பிதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய நீர் ஆணையம் கர்நாடகத்துக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக குரல் எழுப்பி வருகிறது.
இதனால், மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதி உத்தரவை மத்திய அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றமும் பிற மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக் கூடாது என தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளது. நீரைத் தேக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் கர்நாடகத்திற்கு ஏற்ற இடம் ஒக்கனேக்கல் பகுதிதான்.
அந்தப் பகுதியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகம், தமிழகம் இரண்டும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை நாடாளுமன்றத்தில் நாங்கல் வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியையும் மத்திய அரசு தரக் கூடாது.
பெங்களூரு நகர தேவைக்காக மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதாக கர்நாடக அரசு கூறும் காரணம் ஏற்கும்படியாக இல்லை. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து அவர்கள் தண்ணீரைப் பெறலாம். இதனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் அவசியமில்லை என்றார் அவர்.