சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடி பேரைக் கடந்தது.
இதன்மூலம், அதிகம் பேரால் பின்தொடரப்படும் அரசியல்வாதிகளின் பட்டியலில் இவர் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றார்.
ராஜ்நாத் சிங்கின் சுட்டுரைக் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை இரவு 1 கோடியைக் கடந்தது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுட்டுரையில் 1 கோடிக்கும் அதிகமாக பின்தொடர்பவர்களை கொண்டுள்ள மேலும் 4 அரசியல்வாதிகளின் பெயர்கள் பின்வருமாறு:
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. இவரை சுமார் 4.3 கோடி பேர் பின்தொடர்கின்றனர். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (சுமார் 1.3 கோடி பேர்), மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (சுமார் 1.8 கோடி பேர்), வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (சுமார் 1.4 கோடி பேர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உள்துறை அமைச்சகத்தின் சுட்டுரைக் கணக்கை சுமார் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்தக் கணக்கில், ராஜ்நாத்தின் அறிக்கைகள், அவர் மேற்கொள்ளும் பயணங்கள், அமைச்சகம் முன்னெடுத்துவரும் பணிகள், புகைப்படங்கள், ராஜ்நாத்தை முக்கியப் பிரமுகர்கள் சந்தித்து கலந்துரையாடியது தொடர்பான விவரங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் அந்தப் பதிவில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.