பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நடந்துள்ள ஊழல் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
முதலில் லலித் மோடி, நாட்டை விட்டு வெளிநாடு சென்றார். அதையடுத்து, விஜய் மல்லையா சென்றார். தற்போது, நீரவ் மோடி சென்றுள்ளார்.
ஊழலில் ஈடுபட மாட்டேன், அதுபோல் யாரையும் ஊழல் செய்யவும் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவிக்கும் நாட்டின் காவலரான பிரதமர் மோடி, எங்கு சென்றார்? அவரது மௌனத்துக்கான காரணத்தை நாட்டு மக்கள் அறிய விரும்புகின்றனர்.
தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு, நாட்டின் காவலர் போல் பிரதமர் மோடி செயல்பட வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவுகளுடன், சுட்டுரையில் "மோடிராப்ஸ்இந்தியா' எனும் பக்கத்தையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், இந்த பகிர்வை அவர் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பியோடிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த விவகாரத்தில், ஆரம்பம் முதலே மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் கட்சியும், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.