மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மகன் சடலத்துடன் தவித்த இந்தியப் பெண்ணுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்துள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜிடம் சுட்டுரைப் பக்கம் மூலமாக ஒருவர் வியாழக்கிழமை உதவி கேட்டதை அடுத்து, அவர் இந்த உதவியைச் செய்துள்ளார். முன்னதாக, அந்த நண்பர், தனது சுட்டுரைப் பக்கத்தில் விடுத்திருந்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அவசர கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறேன். எனது நெருக்கமான நண்பரும், அவரது தாயாரும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தனர்.
வரும் வழியில், கோலாலம்பூர் விமான நிலையத்தில், திடீரென மயங்கிய எனது நண்பர், அங்கேயே இறந்துவிட்டார். இந்நிலையில், அவரது தாயார் செய்வதறியாது தனியாகத் தவித்து வருகிறார். அவருக்கு உடனடியாக உதவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தச் சுட்டுரைப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன், இறந்தவரின் சடலம் அரசு செலவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்று சுஷ்மா உறுதியளித்திருந்தார்.
பின்னர், சுஷ்மா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'மலேசியாவில் இருந்து இந்தியத் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புடன், இறந்தவரின் சடலத்துடன் அவரது தாயார் சென்னை வருவார். அந்தக் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.