குஜராத்தில் நடைபெற்ற கல்வித் தொடர்பான நிகழ்ச்சியில் அரசியல் ரீதியில் பேசியதாக குற்றம்சாட்டி, படேல் போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேலுக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துடார்பார் கிராமத்தில் கல்வி மற்றும் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ஹார்திக் படேல் கலந்து கொண்டு அரசியல் ரீதியில் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜாம்நகர் காவல்நிலையத்தில் ஹார்திக் படேல், அவரது நண்பர் அங்கீத் தாடியா ஆகியோருக்கு எதிராக துணை ஆட்சியர் ஆர்.கே. படேல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
துடார்புர் கிராமத்தில் கல்வி, விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிக்கு கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி தாடியா அனுமதி கோரியிருந்தார். இதை கருத்தில் கொண்டு, கல்வி, விவசாயம் தொடர்பான நிகழ்ச்சியை நடத்துவதற்கு தாடியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், அந்நிகழ்ச்சியில் ஹார்திக் படேல் பேசிய பேச்சால், அது அரசியல் நிகழ்ச்சியாக மாறி விட்டது. அதாவது, கல்வி தொடர்பான நிகழ்ச்சி நடத்துவதாக தெரிவித்து, அரசியல் நிகழ்ச்சியை அவர் நடத்தியுள்ளனர். இது அந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு எதிரான செயலாகும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹார்திக் படேல், தாடியா ஆகியோருக்கு எதிராக குஜராத் காவல்துறை சட்டத்தின் 36(ஏ), 72(2), 134 ஆகிய பிரிவுகளின்கீழ் ஜாம்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.