கிறிஸ்தவ சமூகத்தினர் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக, அவர்களுக்கென தனி பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (என்சிஎம்) பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த ஆணையம் தயாரித்துள்ள வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முஸ்லிம் சமூகத்தினருக்காக, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. அந்த வரிசையில் கிறிஸ்தவ சமூகத்தினருக்காக, அரசின் முழு செலவில் தனி பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும். கல்விக் கொள்கைகளை வகுக்கும் குழுவிலும், நிபுணர்கள் குழுக்களிலும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சையது காயாருல் ஹஸன் ரிஸ்வியிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேட்டதற்கு அவர் அளித்த பதில்:
கிறிஸ்தவர்களுக்கென தனிப் பல்கலைக்கழகங்கள் அமைப்பது, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு உதவிகரமாக இருக்கும். முதலில் மத்திய அரசு தனது செலவில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும். பிறகு கத்தோலிக் பிஷப் அமைப்பின் ஒத்துழைப்புடன் அடுத்தடுத்த கல்வி நிறுவனங்களை அமைக்கலாம் என்றார் அவர்.
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் இந்த அறிக்கை, அடுத்த கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.