புது தில்லி: பயங்கரவாதிகளின் கையில் அணு மற்றும் வேதியியல் ஆயுதங்கள் சிக்கினால் அது நாட்டுக்கும், மனித இனத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிபின் ராவத், சர்வதேச எல்லையில், நவீன ஆயுதங்களைக் கொண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு உதவுவோர் யார், அதனை எப்படி தடுப்பது என்பதை அறிந்து, அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை தடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எந்த நாடு உதவுகிறது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். அணு மற்றும் வேதியியல் ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கினால் அது மனித இனத்துக்கே ஒரு பேரழிவாக அமையும்.
பயங்கரவாத அமைப்புகள் சில இணையதள சேவைகளையும், சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வருகின்றன. அவற்றை ஆய்வு செய்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆனால் இந்த ஜனநாயக நாட்டில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை மக்கள் விரும்புவதில்லை. நாட்டு மக்கள், தங்களது உயிரின் பாதுகாப்பும், பாதுகாப்பான சுற்றுச்சூழலும் முக்கியமா அல்லது இதுபோன்ற சில தாற்காலிக கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வது கடினமா என்றும் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.