வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரி, மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
எனினும், ஆதார் தொடர்பான மனுக்களை ஏற்கெனவே விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வுக்கு சசிகலா உதவலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக, இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், ஆதார் தொடர்பான மனுக்களை ஏற்கெனவே விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வுக்கு சசிகலா உதவலாம் என்று தெரிவித்தனர்.
அரசின் திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக் கெடுவை, மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.