பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, வெள்ளிக்கிழமை தெலங்கானாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
மக்களவைக்கும், தெலங்கானா சட்டப் பேரவைக்கும் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் உள்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவதற்கு அமித் ஷா நாடு தழுவிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, அமித் ஷா, ஒரு நாள் பயணமாக, வெள்ளிக்கிழமை ஹைதராபாத் செல்கிறார். அங்கு, மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர்களையும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களையும் சந்தித்து அமித் ஷா கலந்தாலோசிக்கவுள்ளார். இதுதவிர, சில பிரபலங்களைச் சந்தித்து, மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனைகளையும் விளக்க உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானாவை பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக அமித் ஷா கருதுகிறார். அந்த மாநிலத்தில் ஆளும் தெலங்கானா அரசுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக பாஜக கருதுகிறது.