புது தில்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ பதிவு செய்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ப. சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் உட்பட 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.