அமர்நாத் யாத்திரை: 21ஆவது குழு பயணம்
இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு புனித யாத்திரையாக 21-வது குழு ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீருக்கு புறப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை போக்குவரத்து மீண்டும் சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது.
இதன்பின்னர், ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து 428 பெண்கள் மற்றும் 50 சாதுக்கள் உட்பட 1,632 பேர் அடங்கிய புதிய குழு பலத்த பாதுகாப்புடன் காஷ்மீருக்கு சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டது. அவர்களில் 184 பெண்கள் மற்றும் 50 சாதுக்கள் கொண்ட 1,011 யாத்ரீகர்கள் குழு பஹல்காம் வழியாக நுன்வான் முகாமுக்கும், மற்ற 621 பேர் பால்தால் முகாமுக்கும் செல்கின்றனர்.
அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, அமர்நாத் குகைக்கோயிலுக்கு நடைபயணமாக அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள்.
2 பேரிடம் விசாரணை: இதனிடையே, பகவதி நகர் முகாம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ரபீக் உல் இஸ்லாம், முகமது அஷ்ரப் அலி ஆகிய 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரிடமும், கடவுச்சீட்டு, அமர்நாத் யாத்திரைக்கான பதிவு ரசீதுகள் முதலிய ஆவணங்கள் சரியாக இருந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் விடுவித்தனர்.