மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜீப் மீது டிராக்டர் வாகனம் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர், குர்கான் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜீப்பில் வியாழக்கிழமை காலை சென்றனர். கஞ்ச்ராம்பூர் கிராமம் அருகே ஜீப் வந்தபோது, அதன்மீது அவ்வழியே வந்த டிராக்டர் வாகனம் மோதியது.
இதில் ஜீப் உருக்குலைந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதுதவிர, மேலும் 5 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தைத் தொடர்ந்து டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர், அங்கிருந்து தப்பியோடி விட்டார். டிராக்டரில் அனுமதியில்லாமல் அவர் மணல் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.