ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 8 வயது சிறுமி, தொடர்ந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். அதன் பிறகே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது உடல் உள்ளுறுப்பு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், 7 நாள்களுக்குப் பிறகு அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்த சிறுமியின் உடல் உள்ளுறுப்புகள் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், அச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அவரை தொடர்ந்து மயக்கநிலையில் வைத்திருக்க சில மாத்திரைகளை கொடுத்துள்ளனர். சாப்பாடு ஏதுமின்றி தொடர்ந்து வெறும் வயிற்றில் மாத்திரை கொடுத்ததால், அச்சிறுமி கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.