கைலாஷ் - மானசரோவருக்கு யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால், அதன்பேரில் வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்த பதிலும் கூறாமல் தாமதித்து வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், இதுவரை யாத்திரைக்காக ராகுல் முறைப்படி விண்ணப்பிக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளது.
திபெத்தில் அமைந்துள்ள மானசரோவருக்குச் செல்வதற்கான யாத்திரை கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த மார்ச் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் நிகழாண்டு மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள விரும்புவதாக ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி தெரிவித்தார். அதற்கான சிறப்பு அனுமதி அவரது தரப்பில் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேஷனல் ஹெரால்டு இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் எம்.பி.யாக இருப்பவர்கள் யாத்திரை செல்ல சிறப்பு அனுமதி வழங்கலாம் என்ற விதி உள்ளபோதிலும், ராகுல் காந்தியின் கோரிக்கையை மட்டும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தாமதித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.