கேரளத்தில் ஒக்கி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில அரசு கோரிய ரூ.7,340 கோடி சிறப்பு நிதிக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜே.மெர்ஸி குட்டி தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து, அவர் புதன்கிழமை பேசியதாவது:
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளது. இதனால், அந்தப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் சுமார் ரூ.131 கோடி மட்டுமே கேரளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மாநில அரசு கோரிய ரூ.7,340 கோடி சிறப்பு நிதிக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றார் அவர்.
முன்னதாக அரபிக் கடலில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ஒக்கி புயலால், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் பெரிய அளவிலான பாதிப்புகள் நேரிட்டன. கேரளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.