பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலாஹுதீனின் மூத்த மகன் ஷக்கீல் யூசுஃப் உள்ளிட்ட 6 பேரிடம் தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
ஷக்கீல் யூசுஃப், ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-ஐ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரும், வழக்கில் தொடர்புடைய மற்ற 5 பேரும், தில்லியில் உள்ள தேசியப் புலனாய்வு அமைப்பு அலுவலகத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிப்பதற்காக, ஹவாலா முறையில் காஷ்மீருக்கு பணம் அனுப்பப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தை காஷ்மீரில் இருந்து ஷக்கீல் யூசுஃப் உள்ளிட்டோருக்கு சையது சலாஹுதீன் அனுப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு இதுவரை 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அந்தக் குற்றப்பத்திரிகைகளில், 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முகமது மக்பூல் பண்டிட், ஜி.எம்.பட் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் இருவரும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, சையது சலாஹுதீனின் மற்றொரு மகன் ஷாகித் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.