காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்னையை முன்வைத்து அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தொடர்ந்து 11-ஆவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படவே இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்திலும் அதிமுக எம்.பி.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை வருவதற்காகவே போராடுகிறோம். மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி தர வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தையும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் தொடர்புபடுத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.