ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. அப்போது 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டம், தாங்தர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடுப் பகுதியில் இந்திய ராணுவம் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது , பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் சிலர், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் கண்டுபிடித்தது.
இதைத் தொடர்ந்து, அவர்களை இந்திய ராணுவம் எச்சரித்தது. இதை பயங்கரவாதிகள் கண்டுகொள்ளவில்லை. இந்திய ராணுவத்தை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால், பதிலுக்கு பயங்கரவாதிகளை நோக்கி இந்திய ராணுவ வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டனர்.
இந்தத் தாக்குதலில், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்மூலம், அப்பகுதியில் நடைபெறவிருந்த பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
சுட்டுக் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளும், எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அதுகுறித்து இந்திய ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.