ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதி வழியே இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டம், கேரன் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை இந்திய ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ராணுவ வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவில்லை.
இதேபோல், அக்னூர் செக்டாரில் பல்லன்வாலா பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். இதைக் கண்ட பயங்கரவாதி, இந்திய ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து பயங்கரவாதியின் சடலத்தின் அருகே கிடந்த 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 5 கைத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடன் பயங்கரவாதி ஊடுருவ முயன்றார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டது மூலம், பஞ்சாயத்து தேர்தலை சீர்குலைக்கும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.