மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
அந்தத் துறையின் அமைச்சராக இருந்துவந்த அனந்த் குமார், கடந்த திங்கள்கிழமை காலமானார். இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக தோமருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனந்த் குமார், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அந்தத் துறை டி.வி.சதானந்த கௌடாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சராக சதானந்த கௌடாவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக தோமரும் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.