லஞ்சம் வழங்கும் வெளிநாட்டவர், வெளிநாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இந்தியா இருப்பதாக ஊழல் எதிர்ப்பு சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் 2018ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சீனா, ஹாங்காங், இந்தியா, சிங்கப்பூர் ஆகியவை உலகில் 2 அல்லது அதற்கு அதிக சதவீத ஏற்றுமதி செய்யும் சக்திகளாக உள்ளன. ஆனால் ஐ.நா.வால் கடந்த 1997ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு தீர்மானத்தில் அவை கையெழுத்திடவில்லை. இதனால் மேற்கண்ட நாட்டினருக்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் லஞ்சம் அளிக்கும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.
வர்த்தகம் செய்வதற்கு உரிய சர்வதேச தரங்கள் ஏற்படுவதற்கான நடவடிக்கையை சீனா, ஹாங்காங், இந்தியா, சிங்கப்பூர் ஆகியவை எடுக்கவில்லையெனில், அந்நாடுகளில் தொழில் செய்யும் நிறுவனங்கள் அதிருப்தியடையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். இது சட்ட அமல் நடவடிக்கையையும் பாதிக்கும். சர்வதேச சந்தையையும் சீர்குலைத்து விடும்.
இதற்கு உதாரணமாக, இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான விவகாரத்தில், லஞ்சம் வழங்கியதாக கூறப்படும் வெளிநாட்டவர் மீது இந்தியாவால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதை எடுத்துக் கொள்ளலாம்.
எனவே, வெளிநாட்டவரால் லஞ்சம் வழங்கப்படுவதை கிரிமினல் குற்றமாக இந்தியா அறிவிக்க வேண்டும். அத்துடன், தனியார் துறையில் இடித்துரைப்பாளர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தையும் இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.