மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர் அடுத்த 4 மணிநேரத்தில் உயிரிழந்தார். அவர் அந்த பாம்பை விழுங்கிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஹிபால் சிங் (40), கூலித் தொழிலாளி. இவர் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கியதால் மரணமடைந்தார். இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில்,
மதுபோதையில் இருந்த மஹிபால் சிங், சாலையில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து வித்தை காட்டியுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தூண்டுதலின் பேரில் அந்தப் பாம்பை உயிருடன் விழுங்கியுள்ளார். பின்னர் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் அந்தப் பாம்பு வெளியே வரவில்லை.
இதனால் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஹிபால், அடுத்த 4 மணிநேரத்தில் விஷத்தின் தாக்கத்தால் மரணமடைந்ததாக தெரிவித்தனர். ஆனால் இதுதொடர்பாக மஹிபாலின் குடும்பத்தினர் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் வழக்குப் பதிவு செய்து தூண்டியவர்கள் குறித்து விசாரித்து வருவதாக ராஜ்புரா கோட்வாலி போலீஸார் தெரிவித்தனர்.
மஹிபால் சிங், மதுபோதையில் பாம்புடன் வித்தை காட்டிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. உயிரிழந்த மஹிபாலுக்கு மனைவி, மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.