மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை (அக். 2) நினைவுகூறும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இலச்சினை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காந்தியடிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய இணையதளத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தை நினைவுகூறும் வகையில் இலச்சினையையும் அவர் வெளியிட்டார்.
ரயில்கள், மெட்ரோ ரயில்கள், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள், மாநில அரசு பேருந்துகள், மத்திய அரசின் இணையதளங்கள், அரசு அலுவலகங்கள், நாள்காட்டி, டைரி, அரசு விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் இந்த இலச்சினை பயன்படுத்தப்படும்.
இணையதளத்தின் வாயிலாக காந்தியடிகள் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் கிடைக்கும். காந்தியடிகள் நிகழ்த்திய உரைகள், விடியோக்கள், அரிய புகைப்படங்கள் இதில் இருக்கும்.
காந்தியடிகள் பிறந்த தினத்தைக் கொண்டாடியது தொடர்பான தகவல்களை அமைப்புகளும், தனிநபர்களும் இணையதளத்தில் பதிவேற்றலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதல், 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி வரை காந்தியடிகளின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
கடந்த மே மாதம் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காந்தியடிகளின் பிறந்த தினத்தைகொண்டாடுவது தொடர்பாக 92 யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
33 யோசனைகளை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான தேசிய குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.