சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக மாயாவதி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "பகுஜன் சமாஜ் கட்சி 35 இடங்களிலும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் 55 இடங்களிலும் போட்டியிடவுள்ளது. இந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றார்.
அஜித் ஜோகி 2000 முதல் 2003 வரை சத்தீஸ்கரின் முதல்வராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் 2016-இல் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.