பெங்களூரு மாநகரச் சாலைகளின் மோசமான நிலை குறித்து விசாரித்து வரும் அம்மாநில உயர் நீதிமன்றம், சாலையில் எத்தனை குழிகள் இருக்கின்றன என்று எண்ணி வருமாறு உத்தரவிட்டது.
பெங்களூருவில் ஏற்படும் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு சாலையில் காணப்படும் குழிகளும் காரணம் என்றும், குழிகளை மூட உத்தரவிடக் கோரியும் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான நேற்றைய விசாரணையின் போது பெங்களூரு சாலையில் மொத்தம் 1,600 குழிகள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததற்கு, சாலைகளில் இருக்கும் குழிகளை எண்ணுவதற்கு உங்களுக்கு அவமானமாக இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், வியாழக்கிழமைக்குள் பெங்களூரு சாலைகளில் ஒரு குழியும் இல்லாமல், எந்த திசையில் இருந்து பார்த்தாலும் பொலிவுடன் காணப்பட வேண்டும். இதற்காக நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது இந்த வேலை செய்து முடிக்கப்படவேண்டும் என்று மாநகராட்சிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.