பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியுள்ள பேராயர் ஃபிராங்கோவுக்கு எதிராக நடவடிக்கைக் கோரி கன்னியாஸ்திரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பாதிரியார், கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஆகியோர் மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கன்னியாஸ்திரி லூசி கலபுராவை தேவாலய நடவடிக்கைகளில் பங்கெடுக்க வேண்டாம் என்று சிரோ மலபார் கத்தோலிக்க தேவாலயம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எழுத்துப்பூர்வமான உத்தரவு எதுவும் எனக்கு அளிக்கப்படவில்லை. தேவாலயம் தொடர்பான எந்த நிகழ்விலும் நான் பங்கேற்க கூடாது என்று மூத்த கன்னியாஸ்திரி உத்தரவிட்டார்' என்றார்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தின் பாதிரியார் யுஹானன் ராம்பனுக்கு சிரியாவில் உள்ள தேவாலய தலைமையகத்தில் இருந்து எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்று ராம்பன் தெரிவித்தார்.
கேரளத்தில் கன்னியாஸ்திரி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஃபிராங்கோ முலக்கலுக்கு எதிராக புகார் எழுந்தது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாஸ்திரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பேராயர் ஃபிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.