அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?
அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
கடந்த 1950-ஆம் ஆண்டில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.
மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு நடுவே, ராமஜென்ம பூமி தொடர்பாக எம்.இஸ்மாயில் ஃபரூக் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1994-இல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கின. இதற்கு எதிராக பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அயோத்தி நிலம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.