புது தில்லி: அரசுப் பணியில் பதவி உயர்வின் போது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்களைக் கேட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதில், அரசுப் பணியில் சேர்க்கையின் போது எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசுப் பணியில் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டியது இல்லை. தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.