புது தில்லி: பெண்களுக்கு அவர்களது கணவர் எஜமானர் அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
தகாத உறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்கக் கோரும் வழக்கில் தீர்ப்பை வாசித்து வரும் தீபக் மிஸ்ரா, ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும் என்றும், சம உரிமை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது குடும்பத்தை அனைத்து விஷயங்களிலும் பெண்கள் கவனித்துக் கொள்கிறார்கள். சமையல், குழந்தை பராமரிப்பு என அனைத்தையும் பெண்களே செய்கிறார்கள். பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டியுள்ளது என்றும் தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
தகாத உறவில் ஈடுபடும் விவகாரத்தில் ஆணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கும் சட்டப் பிரிவு 497ல் திருத்தம் மேற்கொள்ளக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்புக்கு முன்னதாக இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.