கொல்கத்தா: ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு இப்போதைக்கு எதுவும் யோசிக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவர் விஜய் வர்கியா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஆட்சி நிறைவடையும் தருவாயில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் மற்றும் சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் மத்தியில் ஆளும் பாஜக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், எந்தவிதமான முடிவும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு இப்போதைக்கு எதுவும் யோசிக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவர் விஜய் வர்கியா கருத்து தெரிவித்துள்ளார்.
இதகுறித்து அவர் கொல்கத்தாவில் ஞாயிறன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக அவசரச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இப்போதைக்கு இல்லை.
அதேசமயம், அயோத்தியி்ல ராமர் கோயில் கட்டும் துணிச்சல் பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. ஆனால், ராமர் கோயில் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
ராமர் கோயில் விவகாரத்தைத் திசைதிருப்புவதன் மூலம் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற எண்ணி எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன.
இந்த விவகாரத்தில் மக்களின் எண்ணம் சாதகமாக இருந்தால், ஆதரவு அதிகரித்தால் அவசரச்சட்டம் கொண்டுவருவது குறித்து கண்டிப்பாக ஆலோசிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.