புதுதில்லி: பரபரப்பான இந்திய அரசின் சூழலில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா இன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அண்மைக் காலமாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த சூழலில் உர்ஜித் படேல், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை நேற்று திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை (டிச.11) தொடங்குகிறது. இதில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்தக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மத்திய அரசில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜிநாமா செய்து வருவது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இதில் பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், ஆசிமா கோயல் மற்றும் சமிகா ரவி ஆகியோர் மற்ற பகுதிநேர உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.