ரஃபேல் போர் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொள்முதல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோவா, புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
நம் நாட்டுக்கு ரஃபேல் போர் விமானங்கள் தேவையில்லை என்று யார் கூறியது? நமக்கு அவ்வகை போர் விமானங்கள் நிச்சயம் தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபோல் நிச்சயம் ரஃபேல் விமானங்கள் தேவை என இந்திய விமானப்படையும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நமது பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் நீண்டகாலமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய விமானப்படையில் ரஃபேல் சிறப்பான மாற்றத்தையும், பங்களிப்பையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.