தேர்தலில் ராமரோ, அல்லாவோ வெற்றிபெறச் செய்யமாட்டார்கள், மக்கள் தான் வாக்கிளித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.
தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,
"தேர்தலில் ராமர் வெற்றி பெறச் செய்வார் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், தேர்தலில் வெற்றி பெறச் செய்வது ராமரோ அல்லாவோ அல்ல, மக்கள் தான் வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள். கோயில்களா, மசூதிகளா அல்லது குருத்வாராக்களா என்பதல்ல கேள்விகள். இந்தியாவில் இந்த அனைத்து மதங்களும் உள்ளன. அனைத்து மதங்களுக்கும் இந்தியாவில் இடம் இருக்கிறது.
பாஜக எதிர்ப்பு கூட்டணியா என்பது கேள்வியல்ல. டாலர் எங்கே? பொருளாதாரம் எங்கே? ஆர்பிஐ-யில் என்ன நடக்கிறது? அதை தெரிந்துகொள்ள முடிக்கிறதா?
கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தி முன்நோக்கி செல்ல வழிவகை செய்ய வேண்டும். நாட்டை பாதுகாக்க வேண்டும். பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் ஏன் ஒன்றிணைந்து செயல்பட முடியாது. செயல்பட முடியாதது என்று எதுவும் கிடையாது" என்றார்.