செல்லிடப்பேசி செயலி மூலம் முன்பதிவில்லாத பயணச்சீட்டை பெறும் வசதியை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில் முன்பதிவு பயணச்சீட்டை மட்டும் ரயில் பயணிகள் இணையதளத்தில் பெறமுடியும். இந்நிலையில், முன்பதிவில்லாத பயணச்சீட்டையும் இணையதளம் மூலம் பெறுவதற்கான முயற்சியை ரயில்வே அமைச்சகம் 2014-இல் தொடங்கியது.
அதன்படி, இந்த புதிய திட்டத்தின் முன்னோட்டமாக மத்திய ரயில்வேயின் ஒரு சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் செல்லிடப்பேசி செயலி மூலம் முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை பெறலாம் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு, 2015 முதல் 2017-இல் சென்னை, தில்லி, கொல்கத்தா மற்றும் செகந்தராபாத் ஆகிய ரயில் நிலையங்களிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முன்னோட்டம் வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது அனைத்து ரயில் நிலையங்களிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 'யூடிஎஸ்ஆன்மொபைல்' (UTSONMOBILE) எனும் செயலி பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆன்டிராய்ட், ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில், முன்பதிவில்லாத பயணச்சீட்டு மட்டுமின்றி பருவ பயணசீட்டு மற்றும் நடைமேடை சீட்டு உள்ளிட்டவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.
பயணச்சீட்டை பெற பயணிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.