சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதி வரை தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராகேஷ் அஸ்தானாவுக்கும், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் இடையேயான மோதல் முற்றியதை அடுத்து, இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ராகேஷ் அஸ்தானாவும், தேவேந்திர குமாரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது.
வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் இருப்பதால், பதில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வரும் நவம்பர் 1-ஆம் தேதி பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
அதுவரை, ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை, நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கூடாது. இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் உள்ளதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.