விமானங்களை தொழில்நுட்ப பகிர்வு இல்லாமல் முற்றிலுமாக தாமே தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் ஒருபோதும் கூட்டு நிறுவனமாக இருக்காது என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.மாதவன் தெரிவித்தார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்(ஹெச்ஏஎல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.மாதவன் பேட்டியளித்தார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில்,
"விமானங்களை முற்றிலுமாக தாமே தயாரிக்கும் நிறுவனங்களுடன் கூட்டு நிறுவனமாக தேர்வு செய்ய ஹெச்ஏஎல் முறையிடாது. விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்பங்களை பகிரும் நிறுவனங்களுடனே ஹெச்ஏஎல் நிறுவனம் கூட்டு நிறுவனமாக ஒப்பந்தம் மேற்கொள்ளும். இதுபோன்ற ஒப்பந்தங்களையே ஹெச்ஏல் நிறுவனம் பெறும்" என்றார்.
முன்னதாக, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் கூட்டு நிறுவனமாக பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. ஆனால், காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுகளை பாஜக மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் முற்றிலுமாக மறுத்து வருகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடம் 126 போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டது. அதில், 18 போர் விமானங்களை டஸால்ட் நிறுவனம் தயாரித்து அதன் தொழில்நுட்ப பகிர்வு ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் வழங்கப்படும். அதை கொண்டு மீதமுள்ள 108 விமானங்களை ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரிக்கும். இது காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் என்று கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2015-இல் 126 போர் விமானங்களை 36 போர் விமானங்களாக குறைத்து ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், அந்த 36 போர் விமானங்களையும் டஸால்ட் நிறுவனமே தயாரிக்கும் என்ற வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஹெச்ஏஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாதவன் இதனை தெரிவித்துள்ளார்.