திருமலையில் வரும் 14ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளதால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானுக்கு கார்த்திகை மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தன்று புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் 14ஆம் தேதியன்று காலை வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.
7 டன் மலர்கள் மற்றும் இலைகளால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அன்றைய தினம் அபிஷேகம் நடைபெற உள்ளது. புஷ்ப யாகம் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடைபெற, முந்தைய நாள் (13ஆம் தேதி) மாலை நவதானியங்களை முளைவிடும் அங்குரார்ப்பணம் என்ற சடங்கை தேவஸ்தானம் நடத்த உள்ளது.
புஷ்ப யாகத்தை முன்னிட்டு, வரும் 14ஆம் தேதி ஆர்ஜித சேவைகளான சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், 13ஆம் தேதி வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.