கே.சி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மனு அளித்துள்ளார்.
அதிமுக.வில் ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டனர். இதற்காக அதிமுக கட்சி விதிமுறையில் திருத்தமும் செய்யப்பட்டது.
இதை எதிர்த்தும், ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி நியமனத்தை ரத்து செய்யக்கோரியும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையமே முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கே.சி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று மனு அளித்துள்ளார். மனுவில் அடிப்படை உறுப்பினரே இல்லாத கே.சி.பழனிசாமி, வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.