ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் உள்பட பல்வேறு விவகாரங்களில் கேள்வி எழுப்புவோருக்கு பதிலளிக்காமல், அவர்கள் மீது அடக்குமுறையை மத்திய அரசு ஏவி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடுகள், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு, வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவை குறித்து அரசிடம் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்வாறு கேள்வி எழுப்புவோருக்கு விளக்கம் அளிக்காமல், அவர்கள் மீது அடக்குமுறையை மத்திய அரசு ஏவி வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை சுட்டிக்காட்டி வந்த கிரீன்பீஸ் தன்னார்வ அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஊடக நிறுவன உரிமையாளர் ராவக் பாலின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்று சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.