"மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி

சமூக வலைதளமான சுட்டுரையில் "மீ டூ' என்ற பெயரில் பெண்கள் முன்வைத்து வரும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள்,
"மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி

சமூக வலைதளமான சுட்டுரையில் "மீ டூ' என்ற பெயரில் பெண்கள் முன்வைத்து வரும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.
 பெண்கள், தங்களது பணியிடங்களில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறும் "மீ டூ' (நானும் பாதிக்கப்பட்டேன்) பிரசாரம், இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 இதேபோல், பாலிவுட் இயக்குநர் சஜித் கான், நடிகர் அலோக் நாத் உள்ளிட்டோரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.
 மேலும், வெளியுறவுத் துறை இணையமைச்சரும் முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
 இந்நிலையில், "மீ டூ' விவகாரம் தொடர்பாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, பிடிஐ செய்தியாளருக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
 "மீ டூ' பிரசாரத்தில் ஒவ்வொரு பெண்களும் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள வலியையும் வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் புகார்களை நான் நம்புகிறேன்.
 இப்புகார்கள் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக, மூத்த நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள்
 அடங்கிய குழுவை அமைக்க எனது அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
 பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்கு ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து இக்குழு விரிவாக ஆய்வு செய்யும். பின்னர், அதனை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை அமைச்சகத்துக்கு வழங்கும்.
 பெண்கள், தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அமைதி காக்கக் கூடாது. அவற்றை துணிச்சலுடன் வெளியே தெரிவித்து, தங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை வெட்கி தலைகுனியச் செய்ய வேண்டும்.
 இதுபோன்ற புகார்களை, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் "ஷி பாக்ஸ்' இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.
 சுய விவரம் தெரிவிக்காமல் அளிக்கப்படும் புகார்களும் கவனத்தில் கொள்ளப்படும். பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தே பிரதமர் மோடி தலைமையிலானஅரசு செயல்பட்டு வருகிறது.
 "பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம்' திட்டமே அதற்கு உதாரணம் என்றார் மேனகா காந்தி.
 மேலும், இதுபோன்ற புகார்களை முன்வைக்கும் பெண்களை எந்த விதத்திலும் அவமானப்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
 நீதிபதி ஆதரவு: இதனிடையே, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கௌதம் படேல், "மீ டூ' பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மற்ற துறைகளைப் போல நீதித்துறையிலும் ஆணாதிக்கமும், பாலின பாகுபாடும் நிலவுவதாக அவர் கூறினார்.
 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளும் நேரமிது
 பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குறித்த "மீ டூ' இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பெண்களை கெüரவத்துடன் நடத்தவும், அவர்களை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது' என்று கூறியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "மாற்றத்தை கொண்டுவரும் வகையில், உண்மையானது தெளிவாகவும், உரத்த குரலிலும் ஒலிக்க வேண்டும். பெண்களை மதிப்புடனும், கெüரவத்துடன் நடத்துவதற்கு கற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது. அவ்வாறு பெண்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கான வாய்ப்புகளை குறைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
 அக்பரை குறிப்பிடாத ராகுல்: எனினும், வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம். ஜே. அக்பருக்கு எதிராக எழுந்துள்ள பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிடவில்லை. பல்வேறு ஊடகங்களின் ஆசிரியராகக் பணியாற்றியபோது அக்பர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் உள்ளிட்ட 10 பெண்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதையடுத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
 நாடு முழுவதுமாக தற்போது "மீ டூ' என்ற இந்த இயக்கம் முக்கிய விவாதப் பொருளாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பலதுறைகளைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானது தொடர்பாக "மீ டூ' என்ற குறிப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.
 "மீ டூ' புகார்: பிரதமர் மோடிக்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவர் கடிதம்
 பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் கடிதம் எழுதியுள்ளார்.
 அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 "மீ டூ' இயக்கத்தை வரவேற்கிறேன். பெண்கள் தங்களுக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர இந்த இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எம்.ஜே.அக்பரை அமைச்சர் பதவியிலிருந்து நீங்கள் (பிரதமர் மோடி) நீக்க வேண்டும்.
 அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் கிடையாது என்று கருதுகிறேன். 7 பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
 விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்த பிரமதர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுவாதி மலிவால் குறிப்பிட்டுள்ளார்.
 அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. "மீ டு' எனும் பெயரில் பெண்கள் தங்களுக்கு ஆடவரால் இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான கொடுமைகள் உள்ளிட்ட தகவல்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா அண்மையில் சக நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் தற்போது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதில் அவர்கள், பத்திரிகை ஆசிரியராக எம்.ஜே. அக்பர் இருந்தபோது, தங்களிடம் பாலியல் ரீதியில் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
 இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து அக்பர் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com