உல்ஃபா பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர்நீத்த அஸ்ஸாம் காவல் துறை அதிகாரி லோகித் சோனோவாலுக்கு ராணுவத்தின் 2-ஆவது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பயங்கரவாதிகளுக்கு எதிராக துணிச்சல், தலைமைப் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி போரிட்டு உயிர்நீத்த லோகித் சோனோவாலுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்படுகிறது' என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
அஸ்ஸாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி உல்ஃபா பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் ஆய்வாளர் லோகித் சோனோவால் உயிரிழந்தார்.
தின்சுகியா மாவட்டத்தின் கோர்டாய்குரி கிராமத்தில் உல்ஃபா பயங்கரவாதிகள் மறைந்துள்ளதாக ரகசிய தகவல் வந்ததை அடுத்து காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சோனோவால் தலைமையிலான தேடுதல் குழு, ஒரு வீட்டில் சந்தேகப்படும் படியான ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த வீட்டில் ஒரு பெண்ணும், அவரது இரு குழந்தைகளும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்ததை அறிந்த சோனோவால், அவர்களை காப்பாற்றுவதற்காக, தைரியமாக பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டார். அந்த துப்பாக்கி சண்டையின் போது சோனோவால் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். அந்த சம்பவத்தில் இரு பயங்கரவாதிகளையும் அவர் சுட்டுக் கொன்றார்.
தற்போது அவரது துணிச்சலைப் பாராட்டும் வகையில் கீர்த்தி சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.