ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்படுவதற்கு பிரமதர் மோடி தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாகச் சாடினார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல், திங்கள்கிழமை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் நமது வீரர்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். இதுவரை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அவர் என்ன செய்துள்ளார்? ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிரதமர் மோடி உருகுலைத்துவிட்டார். எனவே அங்கு பயங்கரவாதிகள் எளிதில் உள்நுழைகின்றனர்.
பாஜக ஊழல் என்னும் மதத்தை தழுவியுள்ளது. ராணுவ வீரர்களுக்கு ஒரே ஓய்வு ஊதிய திட்டம் என்பது வெறும் பொய். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் இதை நிச்சயம் நிறைவேற்றும். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற ஒரே வாரத்துக்குள் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அவ்வாறு முதல்வர் செய்யத் தவறினால், அவர் நீக்கப்பட்டு அடுத்த காங்கிரஸ் முதல்வர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். நான் பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டேன்.
காங்கிரஸ் அரசாங்கத்தில் ரஃபேல் போர் விமானம் ஒன்றுக்கு ரூ.526 கோடியில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அடுத்த வந்த மோடி அரசு அதே விமானம் ஒன்றுக்கு ரூ.1,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தால் ஏராளமான பொறியாளர்களுக்கு வேலை கிடைத்திருக்கும்.
தற்போது இந்த ரஃபேல் ஊழலை மறைக்கவே சிபிஐ இயக்குநர் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளார். நமது நாட்டின் பாதுகாவலரே திருடனாக உள்ளார் என்று கூறினார்.