தன்னை விஜய் மல்லையா சந்தித்ததாகக் கூறிய விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்தார்.
பொதுத்துறை வங்கிகளில் ரு.9 ஆயிரம் கோடி நிதிமோசடி குற்றவாளி விஜய் மல்லையா லண்டனில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நான் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன் என்றார். இவ்விகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதை மறுத்து விளக்கமளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
விஜய் மல்லையா கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் என்னை சந்திக்க நான் அவருக்கு நேரம் ஒதுக்கியது கிடையாது. அவ்வாறு இருக்கும்போது நான் எப்படி அவரை சந்தித்திருக்க முடியும். இருப்பினும் அச்சமயம் அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். எப்போதாவது அவை நடவடிக்கையில் கலந்துகொண்டுள்ளார்.
அதுபோன்ற ஒரு சூழலில் நான் எனது அறைக்குச் செல்லும்போது வேகமாக என்னிடம் வந்தவர், தனது நிதி விவகாரங்களை சுமூகமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவரின் போலி வாக்குறுதிகள் குறித்து அறிந்து வைத்திருந்ததால், மேற்படி அவரது பேச்சை நிறுத்தும் விதமாக, நீங்கள் என்னிடம் சலுகைகள் கூறுவதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட வங்கிகளில் உள்ள பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள பாருங்கள் என்று கூறினேன்.
அப்போது அவரிடம் இருந்த எந்தவொரு ஆவணங்களையும் நான் பெறவில்லை. ஆனால் அச்சமயம் அவருடனான இந்த உரையாடலை மல்லையா தற்போது திரித்துக்கூறுகிறார். விஜய் மல்லையாவுடன் நான் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்றார்.