லண்டன் செல்லும் முன் நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் விஜய் மல்லையாவை அருண் ஜேட்லி சந்தித்ததாக சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து, வங்கிகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக தெரிவித்தேன்' என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
இதற்கு, கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து மல்லையாவை சந்திக்க நான் நேரம் ஒதுக்கவில்லை. நேரம் ஒதுக்கியிருந்தால்தானே, அவர் என்னை சந்தித்தாரா? இல்லையா? என்ற கேள்வி எழும். விஜய் மல்லையா, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அவர் எப்போதாவதுதான் அவைக்கு வருவார். ஒருமுறை அவையிலிருந்து நான் எனது அறைக்கு சென்றபோது, விறுவிறுவென வந்து என்னுடன் சேர்ந்து நடந்தார்.
அப்போது, வங்கி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன்' என்று தெரிவித்தார். ஆனால், நீங்கள் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை; வங்கிகளிடம்தான் உங்களது திட்டங்களை தெரிவிக்க வேண்டும்' என்று கூறிவிட்டேன். அப்போது, அவரிடம் இருந்து எந்த ஆவணங்களையும் நான் பெறவில்லை. இந்த ஒரு வரி உரையாடல்தான் எங்களிடையே நடைபெற்றது. அதுவும், எம்.பி. என்ற உரிமையை அவர் தவறாக பயன்படுத்தியதால் நடைபெற்ற உரையாடல் என்று அருண் ஜேட்லி விளக்கமளித்தார்.
இதனிடையே, ஜேட்லியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் விஜய் மல்லையா கூறுகையில், மத்திய நிதியமைச்சருடனான எனது சந்திப்பு, அதிகாரப்பூர்வமற்றது; தற்செயலாக நிகழ்ந்தது. இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்க வேண்டாம்' என்றார்.
இந்நிலையில், லண்டன் செல்லும் முன் நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் விஜய் மல்லையாவை அருண் ஜேட்லி சந்தித்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.