பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.85-ஆகவும், டீசல் ரூ.77.74-ஆகவும் உயர்ந்துள்ளது. மும்பையை எடுத்துக் கொண்டால், அவற்றின் விலை முறையே ரூ.89.01, ரூ.78.07-ஆக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவும் எரிபொருள் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது.
சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81-க்கும் அதிகமாகவும், டீசல் விலை ரூ.75-க்கும் கூடுதலாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடி வரும் எதிர்க்கட்சிகள், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.