வரும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் இளம் வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியை வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்துவது குறித்து பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்தக் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் தேர்தலில் சுமார் 9 கோடி இளம் வாக்காளர்களிடம் பாஜகவை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கட்சித் தலைவர்களிடம் அடிக்கடி கூறி வருகிறார்.
குறிப்பாக, 2000-01-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த, முதல் முறை வாக்காளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கட்சியினரிடம் அவர் வலியுறுத்தி வருகிறார். கடந்த 2014-ஆம் தேர்தலில் கூட, இளைஞர்களின் ஆதரவால்தான் பாஜக-வுக்கு மாபெரும் வெற்றி கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்தத் தேர்தலிலும் இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் வகையில், முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியை வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.