குஜராத்தில் மொத்தம் உள்ள 4. 51 கோடி வாக்காளர்களில், 10 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளனர்.
26 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள குஜராத் மாநிலத்தில் வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த 25-ஆம் தேதி வரை, 10. 06 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.
இதுதொடர்பாக குஜராத் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ். முரளி கிருஷ்ணா கூறுகையில், திருத்தப்பட்ட பட்டியலின்படி, மாநிலத்தில் 4, 51, 25, 680 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2. 34 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2.16 லட்சம் பெண் வாக்காளர்களும், 990 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்குவர்.
நவ்சாரி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 19. 71 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, காந்திநகரில் 19. 45 வாக்காளர்களும், ராஜ்கோட்டில் 18.83 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். பரூச் மக்களவைத் தொகுதியில் குறைந்தபட்சமாக 15. 64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வியாழக்கிழமையுடன்(ஏப். 4) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதுவரை 127 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ. 3.37 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.